திருகோணமலை கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையில் டோக்கியோ சீமெந்து பங்கேற்பு

திருகோணமலை கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையில் டோக்கியோ சீமெந்து பங்கேற்பு

டோக்கியோ சீமெந்தின் திருகோணமலை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் திருகோணமலை கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையுடன் இணைந்து செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேசிய கடற்கரை மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் 2018 இன் அங்கமாக இந்த தூய்மையாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.





திருகோணமலை உவர் மலை, சுப்ரா களப்பு பூங்கா பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் சகல அரச நிறுவனங்களின் ஊழியர்கள், மாவட்ட, பிரதேச செயலகங்களின் ஊழியர்கள், நகர சபை, உப்புவெளி பிரதேச சபை, இலங்கை துறை அதிகார சபை, மீன்பிடி திணைக்களம், முப்படைகளின் அங்கத்தவர்கள், திருகோணமலை ரோட்டரி கழகத்தின் அங்கத்தவர்கள், (மாவட்டம் 1598), பாடசாலை மாணவர்கள் போன்றவர்களும் கலந்து கொண்டனர். துறைசார் பங்காளர்களின் உதவியுடன் இரண்டு ட்ரக்கள் நிறைய குப்பைகளை சேகரித்திருந்தமைக்கு மேலதிகமாக, கடற்கரைகளை தூய்மையாக பேண வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயற்திட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.