டோக்கியோ சீமெந்து, Miss Sri Lanka for Miss World 2021 Sade Greenwood தனது சமூக மற்றும் நிலைபேறாண்மை தூதுவராக நியமிப்பு

டோக்கியோ சீமெந்து, Miss Sri Lanka for Miss World 2021 Sade Greenwood தனது சமூக மற்றும் நிலைபேறாண்மை தூதுவராக நியமிப்பு

டோக்கியோ சீமெந்து குழுமம் தனது சமூக மற்றும் நிலைபேறாண்மை தூதுவராக Miss Sade Greenwood ஐ நியமித்துள்ளது. இந்த நியமனத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், Greenwood உடன் பரிமாறிக் கொண்டார். இந்த கைகோர்ப்பினூடாக, டோக்கியோ சீமெந்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக மற்றும் நிலைபேறாண்மை செயற்பாடுகள் தொடர்பான பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளை Greenwood முன்னெடுக்கவுள்ளதுடன், சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். Miss World 2021இல் இலங்கை சார்பாக போட்டியிடுவதற்கு Miss Sade Greenwood தெரிவாகியிருந்ததுடன், கடந்த டிசம்பர் மாதம் போர்டோ ரிகோவில் இடம்பெற்ற சர்வதேச அழகு ராணித் தெரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தார். சிறந்த 40 போட்டியாளர்கள் வரிசையில் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், நடுவர்களின் சிறந்த 25 தெரிவுகளில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். நாற்பது ஆண்டு கால அழகு ராணிப் போட்டித் தெரிவில் இலங்கையர் ஒருவர் பெற்றுக் கொண்ட உயர்ந்த தரப்படுத்தல் இதுவாக அமைந்திருந்தது. தொற்றுப் பரவல் காரணமாக, 2021 உலக அழகு ராணி போட்டியின் வெற்றியாளருக்கு மகுடம் சூடும் நிகழ்வு இந்த ஆண்டு மார்ச் மாதம் போர்டோ ரிகோவில் இடம்பெறும். உலகில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் Ms. Greenwood கடல் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். தமது ஈடுபாட்டினூடாக, எமது சமூகம் மற்றும் சூழலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பரந்த விழிப்புணர்வு மற்றும் ஆதரவை Ms. Greenwood ஏற்படுத்தியுள்ளார். சகல இலங்கையர்களின் வாழ்விலும் நீடித்து நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பல்வேறு நிலைபேறான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு என்பது, இந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளினூடாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், டோக்கியோ சீமெந்து நிறுவனம், சமூக நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் சூழல் பாதுகாப்பு பணிகளை தனது கூட்டாண்மைச் செயற்பாடுகளிலும் உள்வாங்கி முன்னெடுக்கின்றது. அதனூடாக, நாட்டுக்கும், மக்களுக்கும் மற்றும் சூழலுக்கும் வளமூட்டும் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றது.