திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து பயோமாஸ் வலு நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அங்குரார்ப்பணம்

திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து பயோமாஸ் வலு நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அங்குரார்ப்பணம்

திருகோணமலையில் நிறுவப்பட்ட டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் 2வது பயோமாஸ் வலு நிலையத்தை மே மாதம் 5ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குரார்;ப்பணம் செய்திருந்தார். நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் பிறந்த தின நினைவாக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இது அமைந்திருந்தது.

இந்த நினைவு நிகழ்வுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், நிலாவெளி பகுதியில் அமைக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் வீடுகளை பெற்றவர்களுக்கான உறுதிகள் விநியோகம், தொழில்நுட்ப கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டல் மற்றும் சீனக்குடா பகுதியில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பயோமாஸ் வலு நிலையத்தின் அங்குரார்ப்பணம் போன்றன அடங்கியுள்ளன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகள் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் சீமெந்து நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் முன்னணி தொழில்முயற்சியாளராக திகழ்ந்ததுடன், இலங்கையில் முதன் முறையாக பல்வேறு திட்டங்களை ஆரம்பித்திருந்தார். இதில் புதுப்பிக்கத்தக்க பயோமாஸ் வலுப் பிறப்பிப்பும் அடங்கியிருந்தது. 8 MW திறன் கொண்ட நிறுவனத்தின் 2வது பயோமாஸ் வலுப் பிறப்பாக்கல் நிலையத்தை ஜனாதிபதி சிறிசேன அங்குரார்ப்பணம் செய்திருந்தார். இந்த நிலையத்திலிருந்து பிறப்பிக்கப்படும் வலுவிலிருந்து நிறுவனத்தின் குறித்த உற்பத்தி பகுதிக்கு வலுவூட்டப்படுகிறது. மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்த நிலையம், எதிர்வரும் தலைமுறையினருக்கும் முன்மாதிரியாக திகழும்.

டோக்கியோ ஈஸ்டர்ன் பயோமாஸ் நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டியிருந்தார். 2015ல் 2.5 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த நிலையத்தின் மூலமாக தேசிய மின் விநியோக கட்டமைப்புக்கு ஒரு ஆண்டில் 70 Gwh பங்களிப்பு வழங்கப்படும். தொழிற்சாலைகள் மற்றும விவசாய கழிவுகளிலிருந்து இந்த வலுப்பிறப்பாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். சமூக மட்டத்திலிருந்து இந்த கழிவுகள் கொள்வனவு செய்யப்படும். மொத்தமாக இந்த நிலையத்தின் மூலமாக 160 ஆயிரம் MW மணித்தியாலங்கள் தூய மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு ஒரு ஆண்டில் பிறப்பிக்கப்படும். இது சுமார் 100,000 கிராமிய குடும்பங்களின் வருடமொன்றுக்கான மின்சார தேவையை நிவர்த்தி செய்வதாக அமைந்திருக்கும்.

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், ‘2017ம் ஆண்டளவில் நாட்டின் மொத்த வலுத்தேவையின் 10 சதவீதத்தை பாரம்பரியமற்ற புதுப்பிக்கத்தக்க வலுவிலிருந்து நிவர்த்தி செய்வது எனும் ஜனாதிபதி அவர்களின் இலக்குக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆரம்பத்துடன், தேசத்தின் புதுப்பிக்கத்தக்க வலுவில் அதிகளவு பங்களிப்பு வழங்கும் ஒரே நிறுவனம் எனும் நிலையை நாம் எய்தியுள்ளோம். குறிப்பாக 23 MW வலுவை உற்பத்தி செய்வதுடன், தேசிய மின் விநியோக கட்டமைப்புக்கு 2.5 MW மேலதிக வலுவை வழங்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. எனவே, நாட்டின் வலுப்பிரசன்னத்தில் ஒற்றை செயற்பாட்டாளராக அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது’ என்றார்.

இலங்கையில் சீமெந்து மற்றும் கொங்கிறீற் உற்பத்தியில் ஈடுபடும் மாபெரும் நிறுவனம் எனும் வகையில், டோக்கியோ சீமெந்து ஏனைய கூட்டாண்மை நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில், 2008 ல் திருகோணமலையில் அதன் முதலாவது விவசாய கழிவிலிருந்து இயங்கும் மின்பிறப்பாக்கல் நிலையத்தை நிறுவியிருந்தது. தேசத்தின் வலுக்கட்டமைப்பில் தங்கியிருக்காத வகையில், தனது முதலாவது பாரியளவிலான டென்ரோ மின் பிறப்பாக்கல் நிலையத்தை 2014ல் மஹியங்கனைப் பகுதியில் நிறுவியிருந்தது. இதன் திறன் 5 MW ஆகும். இதில் முழுமையான சூழலுக்கு நட்புறவான வகையில் வலுப்பிறப்பாக்கல் நடைபெறுகிறது. டோக்கியோ சீமெந்து கம்பனியின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி கருத்துத் தெரிவிக்கையில், ‘தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை பின்பற்றி, 2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து, முதன் முதலாக மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளை டோக்கியோ சீமெந்து கம்பனி ஆரம்பித்திருந்தது. குறிப்பாக நிறுவனத்தின் சொந்த காணியான நிலாவெளி பகுதியில் அமைந்திருந்த பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கியிருந்தது. 25 குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்புகளை வழங்கியிருந்ததுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப ஏதுவாக அமைந்திருந்தது. இந்த பெருமைக்குரிய நிகழ்வில் ஜனாதிபதி சிறிசேன அவர்கள் கலந்துகொண்டமைக்கு நாம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த ஞானம் அவர்களின் நினைவாக குடியிருப்பாளர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மறைந்த எமது தலைவர் இன்றும் எமக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளதுடன், எமக்கு தொடர்ந்தும் ஊக்குவித்து வருவதுடன், இவரின் நினைவாக முன்னெடுத்த நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

காலையில் இடம்பெற்ற நிகழ்வில் குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் புதிய குடியிருப்புத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டியிருந்தார். இந்தியாவிலிருந்து மீளத்திரும்பிய 25 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. புதிய வீடமைப்புத்திட்டமானது, அருகிலுள்ள சுனாமி இல்லங்களை அண்மித்துக் காணப்படுகின்றன. இவற்றை நிர்மாணிப்பதற்கு 50 மில்லியன் ரூபாய் வரை செலவாகும் என கருதப்படுகிறது. நிலாவெளி, அடம்போடை பகுதியில் தலா 10 பேர்ச் காணியில் அமையவுள்ளன. உள்நாட்டு அதிகார அமைப்புகள் அடங்கலாக மதிப்பீட்டு கழகத்தினால் அனுகூலம் பெறுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.