இலங்கையின் வேலா மீன்கள் எங்கே போய்விட்டன?

இலங்கையின் வேலா மீன்கள் எங்கே போய்விட்டன?

எழுத்தாளர்கள்: சஹான் திலகரட்டன , அக்க்ஷய் டன்னா மற்றும் டேனியல் பெர்னாண்டோ

(ப்ளூ ரிசோர்ஸஸ் டிரஸ்ட் (Blue Resources Trust) யை சேர்ந்தவர்கள், இது இலங்கையின் கடல் வள ஆராய்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு)



மொழியாக்கம்: இராமஜெயம் கோபிராஜ், லஷத்தினி ராஜேந்திரம்

“நீங்கள் எப்போதாவது 1.5 மீட்டர் நீளமான வாள் போன்ற அமைப்பொன்று, 6 மீட்டர் நீளமான உடலுக்கு இணைக்கப்பட்டதை போன்ற உயிரினத்தை பார்த்ததுண்டா?”

செய்தி குச்சவெளி (திருகோணமலை மாவட்டம்) தூசி படர்ந்த பாதை வழியாக விரைவாக பரவியது. மிக வேகமாக அவ்விடம், அவ் விநோதமான உயிரினத்தை பார்வையிட வந்த மக்கள் கூட்டத்தால் நிரம்பியது . அது அவர்களுக்கு கடல்கன்னி அல்லது “டிராகன்” போல தோன்றியது. ஆனால் இது அம்மீனை தனது மகனின் பிறந்த தினத்தன்று (பங்குனி 2017) பிடித்த மீனவரினால் இயற்றப்பட்ட புனைகதை அல்ல.



மீன் சந்தைக்குச் சென்ற கடைசி வேலா மீன் இதுவாக இருக்க முடியுமா? 10 மார்ச் 2017 அன்று அறியப்படாத புகைப்படக்காரரால் எடுக்கப்பட்டது; மீனவர் ஒருவர் பகிர்ந்த படம்.

இந்த அற்புதமான மீன், சரியாகக் கூறினால் இது ஒரு வகை திருக்கை மீன் (இது தமிழ் மொழியில் வேலா அல்லது இலுப்பா என்றும் சிங்கள மொழியில் “தெதி மோரா” என்றும் அழைக்கப்படுகிறது ). இவை கசியிழைய மீன் இனத்தை சேர்ந்தவை. இவ் வகுப்பு அனைத்து வகையான சுறா மற்றும் திருக்கை இனங்களை உள்ளடக்குகின்றது. வேலா மீனின் வாள் போன்ற அதனது மண்டையோட்டில் இருந்தான நீட்சி அதற்கு தனித்துவமானது!

சில தசாப்தங்களுக்கு முன்னர் இவை இலங்கையில் பொதுவாக காணக்கூடிய மீன் இனமாகும். அவைகளின் ரோஸ்ட்ராகள் (rostra) கருவாடுகளை உலர்த்தும் போது தொல்லை தரும் நாய்களை விலக்கி வைக்க அமைக்கும் வேலிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வேலா மீன்களை இப்போது பொதுவாக புகைப்படங்களில் மட்டுமே காண முடிகிறது, மேலும் அவை உடனடியாக பாதுகாக்க படாவிட்டால் நாட்டுப்புற கதைகளின் ஒரு பகுதியாக மாத்திரம் மாறக்கூடும்.

உலகளவில் ஐந்து வகையான வேலா இனங்கள் உள்ளன, அதோடு அவை அனைத்தும் ஐ.யூ.சி.என் இன் சிவப்பு பட்டியலில் (IUCN Red List) அச்சுறுத்தலுக்குள்ளானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய சுறா மற்றும் திருக்கை மீன்கள் போலவே, இவையும் நீண்ட ஆயுள், மெதுவான வளர்ச்சி வீதம், தாமதமான முதிர்ச்சி மற்றும் குறைந்த இனப்பெருக்க திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவைகளின் ரோஸ்ட்ரா அனைத்து வகையான மீன்பிடி வலைகளிலும் சிக்கிக் கொள்கிறது! “ட்வாப் சோவ்பிஷ்” (Pristis clavata) மற்றும் “நெரோ சோவ்பிஷ்” (Anoxypristis cuspidata) ஆகியவை ஆபத்த்துக்குள்ளானவை என பட்டியலிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் “லார்ஜ்டூத் சோவ்பிஷ்” (Pristis pristis), “கிரீன் சோவ்பிஷ்” (Pristis zijsron) மற்றும் “ஸ்மோல்டூத் சோவ்பிஷ்” (Pristis pectinata) என்பன மிகவும் ஆபத்திட்க்குள்ளானவை என பட்டியலிடப்பட்டுள்ளன. CITES பட்டியல் காரணமாக சர்வதேச வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது (Appendix I on the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora).

மூன்று இனங்கள்:” நெரோ சோவ்பிஷ்” (Narrow Sawfish), “லார்ஜ்டூத் சோவ்பிஷ” , (Largetooth Sawfish) மற்றும் “கிரீன் சோவ்பிஷ்” (Green Sawfish) ஆகியவை 1889 முதல் தேசிய உயிரினங்கள் சரிபார்ப்பு பட்டியல்களில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அவற்றை உறுதிப்படுத்த புகைப்பட ஆதாரங்கள் எதுவும் இல்லை.

வேலா மீன்கள் பற்றிய அறிவை விரிவுபடுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில், Blue Resources Trust டாக்டர் ரிமா ஜபாடோ (Elasmo Project) உடன் இணைந்து, Tokyo Cement Group, the Pew Charitable Trusts, Marine Conservation Action Fund (New England Aquarium) and Ocean Park Conservation Foundation ஆகியவற்றின் அனுசரணையில், எங்கள் குழு தீவு முழுவதும் 300 மீனவர்களிடம் நேர்காணல்களை மேற்க்கொண்டது.



எங்கள் தரவுகளின்படி – 50 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான மீனவர்கள் வேலா மீன்களை பிடித்திருந்தாலும், 30 வயதிற்கு உட்பட்ட அனைத்து மீனவர்களாலும் காட்டிய புகைப்படங்களிலிருந்து ஒன்றைக் கூட அடையாளம் காண முடியவில்லை. வேலா மீன்களைப் பார்த்த மீனவர்களில், அரைவாசி மீனவர்கள் 1992 முதல் ஒன்றை கூட காணவில்லை. 32 பேர் மட்டுமே இதுவரை ஒரு வேலா மீனையாவது பிடித்திருக்கிறார்கள். பெரும்பாலான மீனவர்கள் இந்த சரிவுக்கு மீன்பிடி அழுத்தம் மற்றும் மீன்வளர்ப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு முக்கியமான வாழ்விடங்களை அழித்தமை என்பவற்றை காரணமாக கூறினர்.

வேலா மீன்களுக்கு கலாசார அல்லது பாரம்பரிய மதிப்பு இல்லாததையும் எங்கள் ஆய்வு வெளிப்படுத்தியது. இருப்பினும், புனித அன்னேவின் தேசிய ஆலயம் (தலவில) மற்றும் சின்னகுண்டுவா தேவாலயம் (பத்தலங்குண்டுவ) ஆகியவற்றில் வேலா மீன்களின் ரோஸ்ட்ராக்களை (rostra) நாங்கள் பார்வையிட்டோம், அங்குள்ள மீனவர்கள் தங்கள் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ்ட்ராக்களை நன்கொடையாக அளித்ததாகக் குறிப்பிட்டனர், அது அவர்களின் கடற்பயணங்களுக்கு பாதுகாப்பையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என்று நம்பினார்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்த அதிர்ஷ்டம் வேலா மீன்களுக்கு இல்லாமல் போனது.

தரவுகள், மிகையான மீன்பிடி அழுத்தம் காரணமாக குடித்தொகை பெரிதும் குறைந்துவிட்டதை காட்டுவதால், இலங்கையில் வேலா மீன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை நாங்கள் வலுவாக பரிந்துரை செய்கிறோம். இது மீதமுள்ள வேலா மீன்கள் இனப்பெருக்கம் செய்ய மற்றும் அவற்றின் சரிவை மீட்க வழிவகுக்கும். இதேபோன்ற வாழ்க்கை முறையை கொண்ட பிற சுறாக்கள் மற்றும் திருக்கைகளிடம் அதே தவறுகளை மீண்டும் செய்வதைத் தவிர்ப்பதற்கு உடனடியாக செயல்திறன் மிக்க முகாமைத்துவ முறைகள் இயற்றப்படுவதும் மிக முக்கியமாகும். மேலும் விவரங்களை அறிய மற்றும் எங்கள் வெளியீட்டைப் படிக்க, www.blueresources.org ஐ பார்வையிடவும் மற்றும் சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடரவும்.



நமது அடுத்த தலைமுறைகாக எஞ்சியிருக்கும் வேலா மீன் இதுதானா? தலவில தேவாலய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு ரோஸ்ட்ரா.



திரு. ப்ரெண்டன் கூறுகையில், இலுப்பாதீவைச் சுற்றி இனி வேலா மீன்கள் இல்லை (புத்தளம் மாவட்டத்திலுள்ள “இலுப்பா தீவு”)