மதவாச்சி, நாவற்குளம் கிராமத்தில் டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டம் முன்னெடுப்பு

மதவாச்சி, நாவற்குளம் கிராமத்தில் டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டம் முன்னெடுப்பு

மதவாச்சி, நாவற்குளம் கிராமத்தில் டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுபீட்சமான எதிர்காலம் எனும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு தொகுதியை, டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ திறந்து வைத்தார். கிளிநொச்சி, பூநகரியில் அமைந்துள்ள மூன்று கிராமங்களிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 500 பேரைக் கொண்ட விவசாயக் கிராமமான நாவற்குளம் பகுதியில் இம்முறை இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அனுராதபுரத்தில் நிலவும் கொடிய சிறுநீரக கோளாறு நோயினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாக இந்தக் கிராமமும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. சுபீட்சத்தை நோக்கிய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளில், நாட்டின் ஒவ்வொரு இல்லத்துக்கும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்திட்டங்களும் அடங்கியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் பங்களிப்பு வழங்கும் வகையில், ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இந்தத் திட்டத்தினூடாக, தூய நீரை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்கள் நிலவும் பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி கருத்துத் தெரிவிக்கையில், ‘2025 ஆம் ஆண்டளவில் சகல இல்லத்துக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாங்கத்தின் அனைவருக்குமான நீர் எனும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கும் நோக்கில் நாம் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தை ஆரம்பித்தோம். குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்தனர். இந்த விவசாய சமூகத்தின் வாழ்க்கையில் கொடிய சிறுநீரக நோய் என்பது பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர்களுக்கு உதவிகளை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். ஆயிரக் கணக்கான உயிர்களை பாதுகாப்பதுடன், நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்துக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.’ என்றார். சிறந்த தரம் வாய்ந்த குடிநீர் வசதி இன்மை காரணமாக, நாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 125 குடும்பங்களில் இதுவரையில் கொடிய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தினூடாக Reverse Osmosis தொழில்நுட்பத்திலமைந்த நீர் தூய்மையாக்கல் தீர்வு நிறுவப்பட்டுள்ளது. இதனூடாக நாளொன்றுக்கு 5,000 லீற்றர்கள் நீரைப் பெற்றுக் கொள்ள முடியும். வட மத்திய மாகாணத்துக்கான கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கிராமிய அபிவிருத்திச் சங்கம் மற்றும் மதவாச்சி பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை நிர்வகிக்க முன்வந்துள்ளதுடன், கிராமத்தின் அனைவரும் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெறுவதை உறுதி செய்யவுள்ளன. ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தின் அடுத்த கட்டத்தில், அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து கிராமங்கள் Reverse Osmosis (RO) தொழில்நுட்பத்திலமைந்த நீர் தூய்மையாக்கல் அலகுகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளன. நாளொன்றுக்கு தலா 10,000 லீற்றர்கள் நீரை வழங்கக்கூடிய இந்த தீர்வுகள், 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முழு அனுசரணையில் நிறுவப்படவுள்ளன.